ஆந்திராவில் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர மறுத்ததால் குழந்தையின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் குழிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தையை குடும்பத்தினர் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது என உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து குடும்பத்தினர் குழந்தையின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால், இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வராது. அதற்கு தங்களது விதியில் இடமில்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து வேறு வழியின்றி, உறவினர்கள் உயிரிழந்த குழந்தையின் உடலை பைக் ஒன்றில் வைத்து கொண்டு திரும்பி சென்றுள்ளனர். இதனை திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஷ்வர் ரெட்டி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.